அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 
தமிழகம்

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி நிதியை உடனே வழங்க வேண்டும்- பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மருத்துவம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடியைஉடனடியாக ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி யிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர்நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் வைரஸ் தொற்றுபரவலை தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களை கையாள்வதற் கான பரிந்துரைகளை அளிப்பதற் காக தலைமைச் செயலர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட் டுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில், விமான சேவைகளை மீண்டும் தொடங்கக் கூடாது. மாநிலங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது. ரயில்களிலும் லாரிகளிலும் மாநிலங்களுக்கு இடையிலான மளிகை உள்ளிட்டஅத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தை எளிமையாக்க வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்படும்பட்சத்தில், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயதொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவும் கூடுதல் நிதியை அளிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு பிசிஆர் மற்றும் அதிவிரைவு பரிசோதனை உபகரணங்களை அதிகளவில் மத்திய அரசு வழங்க வேண்டும். பாதுகாப்பு உடைகள், என்-95 முகக்கவசங்கள், வெண்ட்டிலேட்டர்கள் போதுமான அளவுக்கு வழங்க வேண்டும். இதற்காக ஏற்கெனவே கோரியிருந்த ரூ.3 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும். மேலும், கரோனா தடுத்தல் மற்றும் அதன் மூலம் மாநில பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலான ஒருங்கிணைந்த திட்டத்துக்காக தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை அளவை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம் என்பதில் இருந்து 4.5 சதவீத மாக உயர்த்த வேண்டும்.

கடந்த 2019-20-ம் ஆண்டில் அனுமதித்ததுபோல் 2020-21-ம் நிதியாண்டிலும் கடன் பெறும் அளவை 33 சதவீதத்துக்கு அதிகமாக அனுமதிக்க வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான நிதி ஆணையத்தின் மானியத்தில் 50 சதவீதமும் வரு வாய் பற்றாக்குறை மானியத்தில் 50 சதவீதமும் தற்போது விடுவிக் கப்படலாம். கடந்த 2019-20- டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்க ளுக்கான ஜிஎஸ்டி நிலுவையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியால் மாநிலங்க ளுக்கு வழங்கப்படும் 30 சதவீதம் வழிவகை மானியம் இந்த 2020-21-ம் நிதியாண்டில் இரண்டு மடங்காக்கப்பட்டு, வட்டியின்றியும் வழங்கப்பட வேண்டும்.

மாநில பேரிடர் நிவாரண நிதியை இதர மாநிலங்கள் 120.33 சதவீதம் பெறும் நிலையில், தமிழகம்வெறும் 64.65 சதவீதம் அளவுக்கேபெறும் வகையில் 15-வது நிதி ஆணையத்தின் வழிமுறை அமைந்துள்ளது. தமிழகம், கடந்த 2016-ல்வார்தா, 2017-ல் ஒக்கி, 2018-ல்கஜா புயல் என தொடர்ந்து பல் வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் இதுவரை மாநில பேரிடர் நிதிக்குகுறைந்த அளவு நிதியே ஒதுக்கப் பட்டுள்ளது. எனவே, உடனடி நிதியாக மருத்துவம் மற்றும் பாது காப்பு உபகரணங்கள் வாங்க தேசியபேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

SCROLL FOR NEXT