நாட்டில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்று பாதிப்புக்கெதிராக அரசின் அத்தனை துறையினரும் கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், இந்த அரசின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இத்தருணத்தில் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் அறிக்கை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று முதன்முதலாக கேரளாவில் வந்தபோதே, தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது.
நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்களை stopcorona.tn.gov.in என்ற பிரத்யேக வலைதளத்தில் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகள் தினமும் ஊடகங்களுக்கு நேரடியாக புள்ளிவிவரங்களை கூறி வருகின்றார். இது பொது மக்களிடையே விழிப்புணர்வையும், அரசின் மீதான நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளது.
அதே போல, வேறு எந்த மாநிலங்களும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தது, சர்வதேச பயணிகளை விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தி கண்காணிப்பில் வைத்தது. அதன் தொடர்ச்சியாக மாநில எல்லைகள் மூடப்பட்டது.
மார்ச் 15 முதல் பொது இடங்களில் கூடத் தடை உத்தரவு, பூந்தமல்லி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மிகச் சரியான நேரத்தில் தமிழக அரசு எடுத்து வந்ததை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவரே பாராட்டியுள்ளார்.
சீனாவில் உள்ள ஊகான் மாகாணத்தில் இந்நோய்த் தொற்று உள்ளது என்று அறிந்தவுடனேயே, ஜனவரி மாதத்திலேயே இந்நோயினைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள், முழு உடல் கவச உடைகள், மருந்துகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஆணை வழங்கிய தீர்க்கதரிசியான அரசு இந்த அரசாகும்.
இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 969 ஆகும். நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பொருட்டு, வீடு வீடாக கண்காணிப்பு நடத்துவதற்கான விரிவான உள்ளூர் கட்டுப்பாட்டு திட்டம் (Containment Zone) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கென தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளில் உள்ள சுமார் 59 லட்சம் மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு உயிரும் விலை மதிக்க முடியாதது என்று கோட்பாடு உடைய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 32 ஆயிரத்து 371 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளும், 3,371 வெண்ட்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைத்துள்ளதுடன், தற்சமயம் 20 சோதனை மையங்களையும் குறுகிய காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும், எதிர்கால திட்டமிடலுக்காக, ஒரு லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட 5,713 தனிமைப்படுத்தும் கட்டடங்கள், அரசு மற்றும் தனியார் துறை கட்டடங்களில் கண்டறியப்பட்டு உள்ளன. போதுமான அளவிற்கு மூன்றடுக்கு முக கவசங்கள், என்-95 முக கவசங்கள் மற்றும் PPE முழு கவச உடைகளும் இருப்பில் உள்ளன.
இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு நில்லாமல், மருத்துவர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,558 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வு பெறும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், களப் பணிகள் ஆற்றுவதற்காக 334 சுகாதார ஆய்வாளர்களும், 1,565 ஒப்பந்தப் பணியாளர்களும், 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களும் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நோய்த் தொற்றை தடுக்கும் பணியில், தன்னலம் கருதாமல் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து களப் பணியாளர்களுக்கும், தேவைப்படும் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், களப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கான முழு மருத்துவச் செலவினையும் தமிழக அரசே ஏற்பதுடன், 2 லட்சம் ரூபாய் அவர்களுக்கு வழங்கும்.
துரதிருஷ்ட வசமாக அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் நேர்வுகளில், ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் நிவாரணம் வழங்கவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, 12 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுக்களை அமைத்து, நோய்த் தொற்று தடுப்பு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளை கண்காணிப்பதுடன், தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில் பொது மக்களுக்கு ஏற்படக் கூடிய சிரமங்களுக்கு தீர்வு கண்டும் வருகிறது.
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது சம்பந்தமாக மருத்துவ வல்லுநர்களின் குழுக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் ஏப் 10 அன்று நடத்தப்பட்டு, அவர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. அப்பரிந்துரைகள் இன்று (11.4.2020) அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, 10 மண்டல அளவிலான சிறப்பு பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், மூத்த இந்திய காவல் பணி அதிகாரியும் கொண்ட இக்குழுக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக களப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.
மார்ச் 24 அன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஊரடங்கினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை களையும் வகையில்,
* இந்தியாவிலேயே முதன்முதலாக, ஊரடங்கு அமலுக்கு வரும் முன்னரே, கொரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பினை 3,280 கோடி ரூபாய் செலவில் அறிவித்து, அதனை உரிய நேரத்தில் அளித்து, பொது மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்த அரசு, தமிழக அரசு தான்.
* அது மட்டுமன்றி, 35.89 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கூடுதலாக 1,000 ரூபாய் நிவாரணமும் அறிவித்து ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திய அரசு, இந்த அரசு.
* மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதலாக 2 நாள் ஊதியத்தை வழங்க ஆணையிட்டதும், இந்த அரசு தான்.
* நாளொன்றுக்கு சுமார் 6 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அம்மா உணவகத்தில் சுகாதாரமான உணவினை வழங்கி வருவது தமிழக அரசு தான்.
* முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு 1,250 சமுதாய உணவுக் கூடங்களில் இருந்து உணவு வழங்குவது இந்த அரசு தான்.
* தங்கள் வீட்டு வாசலிலேயே பொது மக்களுக்கு காய்கறிகள் கிடைக்க வகை செய்ய, உள்ளாட்சித் துறை, வேளாண்மைத் துறை மற்றும் கூட்டுறவுத் துறையின் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலமாக காய்கறிகளை வழங்கி வரும் அரசு, இந்த அரசு தான்.
*வேளாண் பெருமக்களின் விளைபொருட்களை குளிர்சாதனக் கிடங்குகளில் வைத்து, பாதுகாத்து, உரிய விலை கிடைக்கும் வகையில், அதற்கான கட்டண விலக்கும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கு சந்தைக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
*சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இன்று தமிழகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சனையான கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி பயன்படுத்துவதை வரவேற்காமல், அதற்கு கண்டனம் தெரிவிப்பது இவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
*தமிழ்நாடு அரசுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக 510 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, 48 கோடியே 24 லட்சம் ரூபாயினை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு வழங்கியுள்ளது.
மேலும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 312 கோடியே 64 லட்சம் ரூபாயினை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நமது திறமை வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முயற்சியால், தமிழ்நாட்டில் இறப்பு விகிதமும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதற்கு பிரதமருடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறைச் செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிதிகளைத் தவிர, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிகிச்சை அளிக்கவும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கடிதம் மூலமும்பிரதமர் அவர்களிடம் காணொலிக் காட்சி மூலமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், இந்த அரசின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் இத்தருணத்தில் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இது அவரது சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது.
நோய்த் தொற்றினை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதனைக்கு உட்படுத்துதல், நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல், நோய்த் தொற்று பரவாதிருக்க ஊரடங்கு உத்தரவு, ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கண்காணிக்க காவல் துறையினர் இரவு பகல் பாராது பணி செய்து வருதல், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து உறுதி செய்ய சிறப்பு நிவாரணம்.
ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவுப் பாதுகாப்பு, வேளாண் பெருமக்களுக்கு கட்டண சலுகைகள் என பன்முக நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
நிலைமை இவ்வாறிருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது, தன்னலமற்று பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பணியாளர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.