தமிழகம்

விதியை மீறி மதப் பிரச்சாரம்: இந்தோனேசியா தம்பதிகள் உட்பட 9 பேர் கைது

செய்திப்பிரிவு

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜெய்லானி (42), இவரது மனைவி சித்தி ரொகானா (45), ரமலன் பின் இபுராகீம் (47), இவரது மனைவி அமன் ஜகாரியா (50), முகம்மது நஷீர் இபுராகீம் (50), இவரது மனைவி ஹமரியா (55), மரியோனா (42), இவரது மனைவி சுமிஷினி (43) ஆகிய 4 தம்பதிகள் கடந்த மார்ச் 8-ல் ராமநாதபுரம் வந்தனர்.

இவர்கள் பள்ளிவாசல்களில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு மார்ச் 24-ல் ராமநாதபுரம் வந்தபோது போலீஸார் பிடித்து சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து தங்கியிருந்த வீட்டிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுற்றுலா விசாவில் வந்து அனுமதி பெறாமல் ஊரடங்கை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக இந்தோனேசிய தம்பதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியதாக ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த மூமின் அலி, பாரதி நகரைச் சேர்ந்த அசரப் அலி, முகம்மது காசீம் மீது கடந்த 5-ம் தேதி கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

பின்னர் இந்தோனேசிய தம்பதிகள் மற்றும் மூமின் அலி உட்பட 9 பேரை கைது செய்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து பரமக்குடி கிளைச் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசதிகள் இல்லாததால் தனியார் விடுதியில் சிறைப்படுத்தினர்.

SCROLL FOR NEXT