திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியரிடம் நிலவரம் குறித்து அறியும் சட்டப்பேரவை உறுப்பினர் வெ.கணேசன். 
தமிழகம்

மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்: திட்டக்குடி எம்எல்ஏ பேட்டி

என்.முருகவேல்

மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியை மக்கள் தேவை அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாக அவரவர்களுக்கே மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என திட்டக்குடி எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், மக்களுக்கு நிவாரணம் மேற்கொள்வதற்காகவும் மத்திய அரசு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களுக்கான மேம்பாட்டு நிதி மற்றும் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று (ஏப்.10) ஆய்வு செய்த திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வெ.கணேசன், அங்குள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ சேவையாற்றுவதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போது ஆபத்தான சூழலில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் முறையான முகக்கவசமோ, கையுறையோ, கிருமிநாசினி திரவமோ வழங்கப்படவில்லை. அவர்கள் தன்னார்வலர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உள்ளது.

மத்தியப் பிரதேசதத்தில் மருத்துவர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கும் சூழலில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. அடித்தட்டு மக்களை நேரடியாக சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் அவர்களின் தேவைகளை கூறுகின்றனர். எனவே, மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT