மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு: பணிச்சுமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காவலர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்படாதவாறு டிஜிபியும், அரசும் அக்கறை காட்ட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண்காந்தி. இவர் நேற்று (ஏப்.8) வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அருண்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அருண்காந்தி: கோப்புப்படம்

இந்நிலையில், போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் மரணத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.9) தன் ட்விட்டர் பக்கத்தில், "பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருக்கடியான இக்காலத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை, மனஅழுத்தம் ஏற்படாதவாறு டிஜிபியும், அரசும் அக்கறை காட்ட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT