தமிழகம்

இலங்கைக்கு 10 டன் மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு: இந்திய மக்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச நன்றி 

செய்திப்பிரிவு

இலங்கையில் கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க இந்தியா 10 டன் மருத்துவப் பொருட்களை அன்பளிக்காக அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 185 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், இலங்கையின் மருத்துவர்கள் சங்கம் இலங்கையில் 2000 கரோனா வைரஸ் தொற்றுள்ள நோயார்களுக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டினை சமாளிக்க அந்நாட்டு அரசு இந்திய அரசிற்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 10 டன் மருத்துவப் பொருட்களை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

இந்தப் பொருட்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை கொழும்புவிற்கு வந்தடைந்தது.

இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எத்தகைய சூழ்நிலையிலும் இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டினை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

இந்தியாவில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நட்பு நாடுகளுக்கு தமது வளங்களை பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வழங்கியுள்ள இந்த உதவிக்காக இந்திய மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்ச நன்றிகளை தெரிவித்துள்ளார்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT