தமிழகம்

இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஏடிஜிபியிடம் எச்.ராஜா மனு

செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மனு அளித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதனை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி இளங்கோவனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே. ராஜேந்திரனிடம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று மனு அளித்தார்.

இது தொடர்பாக எச்.ராஜா கூறியதாவது:

ஒரு மாநிலத்தின் முதல்வரை பிரதமர் சந்தித்துப் பேசுவது இயல்பானது. ஆனால், பிரதமர் மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பை களங்கப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார்.

இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் எம்.பி.யான ஜே.கே.ரித்தீஷும் கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் இன்று மனு அளித்தார்.

SCROLL FOR NEXT