மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை 
தமிழகம்

கரோனா: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.6) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின்போது, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்கவும், நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்டத்தில் உள்ள நிலையில், அது மூன்றாம் கட்டத்தை எட்டாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு முடிவை மத்திய அரசு நீட்டிக்கும் பட்சத்தில், அல்லது மாநிலங்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிக்கும்பட்சத்தில், அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT