தமிழகம்

ஊதிய ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா

செய்திப்பிரிவு

போக்குவரத்து ஊழியர் புதிய ஊதிய ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்களை முழுமையாக அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் அரசு பணிமனைகள் முன்பு 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 12-வது புதிய ஊதிய ஒப்பந்தம், கடந்த ஏப்ரல் 13-ம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்களை உடனடியாக அமல்படுத்தக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழி லாளர்கள் நேற்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள 286 போக்குவரத்து பணிமனை களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பல்லவன் இல்லம், வடபழனி, வியாசர் பாடி, அடையார், தாம்பரம், தண்டையார்பேட்டை, திருவொற்றி யூர், மாதவரம் உள்ளிட்ட பணி மனைகளில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் அரசு மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங் களை எழுப்பினர். ஊழியர்களின் போராட்டத்தால், பேருந்து சேவை பாதிக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

11 தொழிற்சங்கங்கள்

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறிய தாவது:

புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி, ஊதிய உயர்வைத் தவிர, மற்ற பலன்களை அமல்படுத்தவில்லை. சீருடைகள் வழங்குதல், கல்வி உதவித் தொகை மற்றும் முன் பணம், ஒப்பந்த கால நிலுவைத் தொகை, உதிரி பாகங்கள் பற்றாக்குறையை போக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற் சங்கங்கள் சார்பில் போக்குவரத்து பணிமனைகளில் தர்ணா போரட்டம் நடத்துகிறோம். செப்டம்பர் 2-ம் தேதி நடக்கவுள்ள பொது வேலைநிறுத்தம் தொடர்பான விளக்கப் போராட்டமாகவும் இதை நடத்துகிறோம்.

தர்ணா போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங் கேற்றனர். தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு நடராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT