திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் ஏழை குடும்பங்களுக்கு நகரத்தார் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 
தமிழகம்

சிவகங்கையில் 5 கிராமங்களில் தவித்த ஆயிரம் குடும்பங்கள்: அரிசி, பருப்பு வழங்கி உதவிக்கரம் நீட்டிய நகரத்தார் 

இ.ஜெகநாதன்

சிவகங்கை அருகே 5 கிராமங்களில் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்த ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்புகளை நகரத்தார் மக்கள் வழங்கினர்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கால் கிராமமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். வேலை செல்லாததால் கூலித் தொழிலாளர்கள் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கண்டவராயன்பட்டி, காவனூர், நல்லிப்பட்டி, பையூர், பரக்கினிப்பட்டி ஆகிய 5 கிராமங்களில் ஆயிரம் குடும்பங்கள் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார்கள் இணைந்து குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசியும், டாக்டர் குமரப்பன் மற்றும் அவரது நண்பர்கள் தலா அரை கிலோ துவரம்பருப்பும் நன்கொடையாக வழங்கினர்.

அவற்றை ஊராட்சித் தலைவர் அபிராமி சசிக்குமார் மற்றும் நகரத்தார்கள் வீடு, வீடாக சென்று வழங்கினர். தன்னார்வலர்களை கிராமமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT