தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 நிவாரணம் மற்றும் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் ‘டோக்கன்’ மூலம் இன்று முதல் விநி யோகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, பொதுமக்கள் வெளியில் வருவது தடை செய்யப் பட்டுள்ளது. இதனால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதை கருத்தில்கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி, ஏப்ரல் மாதத்துக்கான சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிவாரண நிதி மற்றும் பொருட்கள் விநியோகம் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம்தேதிக்குள் முடிக்கப்படும் என்றும், ஏப்ரல் 3-ம் தேதி வழக்கமான விடுமுறை ரத்து செய்யப்பட்டு நியாயவிலைக் கடைகள் செயல்படும் என்றும் அறிவிக் கப்பட்டது. மக்கள் திரள்வதைத் தவிர்க்க டோக்கன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படுகிறது. சில மாவட்ட ஆட்சியர்கள் நகர்ப்புறங்களில் நேரடியாக வீடுக ளுக்கும், கிராமப்புறங்களில் நியாயவிலைக் கடைகளிலும் வழங்க முடிவெடுத்துள்ளனர்.
இதன்படி, இன்று (2-ம்தேதி) நிவாரணம் பெறும் நபர்களுக்கான டோக்கன்கள் நேற்று வழங்கப்பட்டன. தெரு அல்லது வரிசை எண் வாரியாக கடை விற்பனையாளர்கள் தங்கள் வசதிப்படி டோக்கன்களை வழங்கினர். அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் வந்து நேரடியாக பொருட்களை நியாயவிலைக் கடைகளில் வாங்கவும், சமூக விலகலை கடைபிடிக்கவும் பொதுமக்களுக்கு கடை விற்பனை யாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல், நேரடியாக வீடுகளுக்கு வழங்கப்படும் திட்டத்திலும் பொதுமக்களுக்கு டோக்கன்வழங்கப்பட்டுள்ளது. டோக்கன்பெறாதவர்கள் அதுகுறித்து கடை விற்பனையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதற்காக மொத்தமாக சென்று கடைகளில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவறுத்தியுள்ளன.