செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் ஆதரவற்ற முதியவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், போலீஸார் இறுதிச் சடங்கு செய்தனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்தது. சமூக விலக்கல் மூலமே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த ஊரடங்கை கடுமையாகக் கடைப்பிடித்து வருகிறது மத்திய அரசு. இதனால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
தமிழகத்திலும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசியக் காரணங்கள் தவிர்த்து வேறு யாரும் வெளியில் சுற்றக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 979 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இதனிடையே செஞ்சி அருகே சிறுணாம்பூண்டி கிராமத்தில் உறவினர்கள் இன்றி ஆதரவற்று வசித்து வந்த சோலை (62) என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரின் உடலை கரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் யாரும் அடக்கம் செய்ய முன் வரவில்லை. இத்தகவல் அறிந்த அனந்தபுரம் போலீஸார் இறந்தவரின் இறுதிச் சடங்கிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவாய்த் துறை முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர்.
விழுப்புரம் போலீஸாரின் இச்செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.