கரோனா வைரஸ் பரவலை தடுக்க, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த ஒக்கிலிப்பட்டி, சிக்கநாயக்கன் பாளையம் ஆகிய இரு கிராம மக்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இதுகுறித்து ஓ.ராஜாபாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் கட்டுப்படுத்த, மக்கள் தனித்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக, எங்கள் கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டும், வீடுகளை விட்டும் வெளியேறுவதில்லை. அத்தியாவசியத் தேவையின்றி யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. தவிர்க்க முடியாமல் வெளியில் சென்று வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும். இங்கு வருபவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம். கிராம எல்லையில் தடுப்பு அமைத்து விழிப்புணர்வு பேனரும் வைத்துள்ளோம்”என்றார்.
உதவித்தொகைக்கு கோரிக்கை
திருச்செங்கோட்டில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ராஜா கூறும்போது, “தமிழ்நாடு முடி திருத்துவோர் நல வாரியத்தில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். எங்கள் நல வாரியத்துக்கு உதவித் தொகை எதையும் அரசு அறிவிக்கவில்லை. 144 தடை உத்தரவு காரணமாக நாங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளோம்.
எனவே, எங்கள் குடும்பத் துக்கு தலா ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்”என்றார்.