தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 13,323 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.
277 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 1,500 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 1252 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 208 மாதிரிகள் சோதனையில் உள்ளன. 40 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்றிரவு நிலவரப்படி தமிழகத்தில் 40 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளார். 208 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 35 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் நேற்றிரவு மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பொது சுகாதாரத்துறை அறிவிப்பின்படி மேலும் இரண்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து திரும்பிய 42 வயது நபருக்கும், இங்கிலாந்திலிருந்து வந்த 49 வயது நபருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து எண்ணிக்கை 40 ஆனது.
இந்நிலையில் மேலும் 2 பேருக்கு இன்று மாலை கரோனா தொற்று இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனை தனி வார்டில் சிகிச்சைப்பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நபர் விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயதானவர். இவர் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 2 பேர் சிகிச்சையில் உடல் நலம் தேறிவிட்டதாலும், ஒருவர் உயிரிழந்ததாலும் எண்ணிக்கை தற்போது 39 ஆக உள்ளது.