சிவகங்கை அருகே ஆயுதப்படை குடியிருப்பில் முககவசம் தயாரிக்கும் போலீஸார். 
தமிழகம்

சிவகங்கையில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு: ஓய்வு நேரங்களில் முகக்கவசம் தயாரிக்கும் ஆயுதப்படை போலீஸார்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஆயுதப்படை போலீஸார் ஓய்வு நேரங்களில் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் 40 பேர் பாதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முககவசம் அணிய வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு முகக்கவசத்தை அதிபட்சம் 4 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரும் பயன்படுத்த தொடங்கியதால் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்கப்பட்ட முகக்கவசம் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் பணியில் இருக்கும் போலீஸாருக்கு முகக்கவசம் கிடைக்காதநிலை உள்ளது. இதையடுத்து ஆயுதப்படை போலீஸாரை முகக்கவசம் தயாரிக்க எஸ்.பி. ரோஹித்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

பணி முடிந்தபிறகு ஆயுதப்படை குடியிருப்புக்கு வரும் போலீஸார் ஓய்வு நேரங்களில் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் வரை முககவசம் தயாரிக்கின்றனர். அவர்கள் தயார் செய்யும் முகக்கவசங்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட போலீஸாருக்கு விநியோகிக்கப்பகின்றன. கூடுதலாக தயாரிக்கப்படும் முகக்கவசங்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

SCROLL FOR NEXT