திருச்சி: தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த மக்கள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்ற அச்சம் இருந்ததாலும், மக்கள் ஊரடங்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியதாலும் 21-ம் தேதியன்று காய்கறிகளை வாங்க மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்தனர்.
இந்தநிலையில், மக்கள் ஊரடங்குக்குப் பிறகு நேற்று காந்தி மார்க்கெட் உட்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மார்க்கெட்டுகளிலும் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து இருந்தது. இதன்படி, மக்கள் ஊரடங்குக்கு முந்தைய நாளும், நேற்றும் காய்கறி விலை நிலவரம்...
பீன்ஸ் ரூ.40 ரூ.100
அவரை ரூ.40-50 ரூ.70-80
கேரட் ரூ.40 ரூ.60
கத்தரி ரூ.20-30 ரூ.40-50
கோஸ் ரூ.10-20
தக்காளி ரூ.15-20
புடலை ரூ.10-20
பச்சமிளகாய் ரூ.20-40
சவ் சவ் ரூ.15-30
வெண்டை ரூ.20-40
வெள்ளை முள்ளங்கி ரூ.15-30
இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று(மார்ச் 24) முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் காய்கறி கடைகள், மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
இதுதொடர்பாக காந்தி மார்க்கெட் காய்கறி விற்பனை சங்கங் களின் நிர்வாகிகள் கூறியது: மக்கள் ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வராததால், தோட்டங்களில் காய்கறிகள் பறிக்க ஆட்கள் பற்றாக்குறை இருந்தது. இதனால், காய்கறிகள் வரத்து கணிசமாக குறைந்திருந்தது. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினமும் அனைத்துக் காய்கறிகளையும் சேர்த்து 1,000 முதல் 1,200 டன் வரை வரும். ஆனால், நேற்று 300 முதல் 500 டன் வரைதான் காய்கறிகள் வந்தன. இதனால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்தன.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அறிவிப்பு வெளியாகியுள்ளதால், காய்கறி விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.