அத்தியாவசியப் பொருள்களை குடியிருப்புகளுக்கு அருகிலேயே விநியோகிக்க வசதியாக ரூ.9 கோடியே 66 லட்சத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 110-வது விதியின்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க, ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும். உள்கட்டமைப்பு வசதியைமேம்படுத்தி, வாடிக்கையாளர் களுக்கு நவீன வங்கி சேவையை வழங்குவதற்காக 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 6 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளுக்கும் தலா ஒரு நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவுக் கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் என மொத்தம் 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு ரூ.27 கோடியே 74 லட்சத்தில் சொந்த அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.
வணிக வங்கிகளுக்கு இணையாக புதிய வசதிகளுடன் கூடிய நவீன வங்கிச் சேவையை வழங்க 74 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மத்திய கூட்டுறவு வங்கிகள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், ஒரு தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என மொத்தம் 95 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.14 கோடியே 75 லட்சத்தில் நவீனமயமாக்கப்படும்.
புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக் கட்டிடங்கள், மதுரை மாவட்டமத்திய கூட்டுறவு வங்கி தலைமைஅலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் ஆகியவை ரூ.17 கோடியே 87 லட்சத்தில் கட்டப்படும்.
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம் மஞ்சக்குட்டை ஊராட்சி செம்மடுவு கிராமத்தில் ரூ.15 கோடியே 85 லட்சத்தில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமாக சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இடத்தில் ரூ.5 கோடியே 65 லட்சத்திலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள மற்றொரு இடத்தில் ரூ.4 கோடியே 15 லட்சத்திலும் 2 திருமண மண்டபங்கள் கட்டப்படும். தமிழகம் முழுவதும் கூடுதலாக 189 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் தொடங்கப்படும். 50 இடங்களில், ரூ.70 கோடியில் நெல் உலர் களன், நவீன நெல் சேமிப்பு கொள்கலன் ஆகிய வசதிகளுடன் கூடிய நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கட்டப்படும்.
30 ஆண்டுகளுக்கு மேலான, எதிர்காலத்தில் பயன்படுத்த இயலாத அளவுக்கு சேதமடைந்த கிடங்குகளை முற்றிலுமாக அகற்றி, சென்னை ஐஐடியின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் ரூ.100 கோடியில் கட்டப்படும்.
வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பதப்படுத்தி சேமித்து வைக்க ரூ.225 கோடியில் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் கூடிய நெல்சேமிப்பு கொள்கலன்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகங்களில் உள்ள சேதமடைந்த சாலைகள், இணைப்புச் சாலைகள் ரூ.120 கோடியில் புதிய சிமென்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை ஐஐடியின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் ரூ.100 கோடியில் கட்டப்படும்.