வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருகிற வாகன ஓட்டிகள் சில நிமிடங்கள் நின்று பேசுவதால்,‘டோல்கேட்’களில் ‘கரோனா’ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், தற்காலிகமாக ‘டோல்கேட்’களை மூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள், சாலைகளைப் பயன்படுத்த ‘டோல்கேட்’ கட்டணம் செலுத்துகின்றனர்.
இந்தக் கட்டணம் செலுத்துவதற்காக கார், கனரக வாகனங்கள் மற்றும் பஸ் டிரைவர்கள், சில நிமிடங்கள் நின்று ‘டோல்கேட்’களில் கட்டணம் செலுத்தி கடந்து செல்கின்றனர்.
அப்போது ‘டோல்கேட்’களில் உள்ள ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் பேசுவார்கள். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள். வாகனங்களில் காத்திருப்போரில் ‘கரோனா’ வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் தும்மும், இருமும்போது அது மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
அதனால், தற்காலிகமாக ‘கரோனா’ அச்சம் அடங்கும் வரை, பரவுவதைத் தடுக்கும் வரை ‘டோல்கேட்’களை மூட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘‘டோலகேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.
அவர்கள், வடமாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் வாகனங்களில் கடந்து செல்வார்கள். தற்போது முழுக்க முழுக்க விமானநிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டினரை மட்டுமே குறிவைத்து பரிசோதனை நடக்கிறது.
அவர்கள் மூலம் தொற்று பரவிய உள்நாட்டினர் ‘டோல்கேட்’கள் வழியாக வாகனங்களில் கடக்க வாய்ப்புள்ளது. அதனால், தற்காலிகமாக ‘டோல்கேட்’ மூடுவதும், கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்தினால் ‘கரோனா’ வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம், ’’ என்றனர்.