இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு, ஒவ்வொரு நுகர்வோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
நுகர்வோரைப் பாதுகாக்க சட்டம் இருந்தாலும், போதுமான விழிப்புணர்வு இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நுகர்வோரின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகிடைக்கும் என்று வலியுறுத்துகின்றன நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.
இதுகுறித்து கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் `இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: குண்டூசி வாங்குவது முதல் விமானத்தில் பயணிப்பது வரை நுகர்வோர் விதவிதமாய் ஏமாற்றப்படுகிறார்கள். அதேசமயம், `நமக்கு எதற்கு தேவையற்ற பிரச்சினை, யாரோ பார்த்துக் கொள்வார்கள், இதையெல் லாம் மாற்ற முடியுமா?` என்றஅவநம்பிக்கைதான், ஏமாற்றுபவர்களை உற்சாகப்படுத்துகிறது.
ஒவ்வொரு பொருளிலும் தயாரிப்பு, காலாவதியாகும் நாள், அதிகபட்ச சில்லறை விலை, நிகர எடை, தயாரிப்பாளரின் விலாசம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பல பொருட்களில் இந்த விவரங்கள் இருப்பதில்லை அல்லது தவறான விவரங்களாக இருக்கின்றன. இவற்றை நுகர்வோர் சரிபார்த்த பின்னரே, அதை வாங்க வேண்டும்.
அதேபோல, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, வீட்டுவசதி, காப்பீடு உள்ளிட்ட சேவைகளைப் பெறும்போது, நாம் கொடுக்கும் பணத்துக்கு அது இணையாக உள்ளதா என்றும், பாதுகாப்பான சேவையாக இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதை மீறி ஏமாற்றப்பட்டது தெரியவந்தால், நமதுஎதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். பரிகாரம் தேவைப்படுவோர், மாவட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை நாடலாம்.
இலவசமாக சட்ட ஆலோசனை வழங்க நுகர்வோர் அமைப்புகளும், இலவச சட்ட மையமும் தயாராக உள்ளன. இதில் நீதி கிடைக்காவிட்டால், மாநில அளவிலான நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம். அதிலும் திருப்தி இல்லையெனில், தேசிய நுகர்வோர் ஆணையத்தை நாடலாம்.
நுகர்வோரைப் பாதுகாக்க 1986-ல் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு, 1986 டிச.24-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1987 ஜூலை 1-ல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 2018-ல் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு,2019-ல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் பல்வேறு அம்சங்கள், தற்போதைய நுகர்வோருக்கு பெரிதும் உதவக் கூடியவை. இணையதளம் மூலம் (ஆன்லைன்) பொருட்களையும், சேவையையும் பெறுவோருக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு, பொருட்கள், சேவையில் குறைபாடு இருப்பின், புகார் கொடுப்பதற்கான எல்லைகளை மாற்றியமைத்தது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.
அதேபோல, இழப்பீட்டுத் தொகையின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு என்றஎல்லை தற்போது ரூ.1 கோடியாகவும், மாநில அளவில் ரூ.1 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் தேசிய நுகர்வோர் ஆணையத்தை அணுகலாம்.
நுகர்வோர் பாதுகாப்புக்காக தேசிய அளவில் மத்திய முதன்மை ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
முறையற்ற வர்த்தகத்தை தடுப்பது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறான, மோசடியான தகவல்களுடன் கூடிய பொருட்களை விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்துவது, அபராதம், சிறைத் தண்டனை விதிக்கும் அதிகாரம், பொதுவான பிரச்சினைகளுக்காக முறையிட நுகர்வோர் அமைப்புகளுக்கு உரிமை, இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தம் செய்யும் குழு, குறிப்பிட்ட விலைக்கு மேல்பொருட்களை விற்பனை செய்வதைத் தடுப்பது, இணைய வழியில் புகார் அளிக்கும் வசதிஎன பல வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி மற்றும் உறுப்பினர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மொத்தத்தில், ஒவ்வொரு நுகர்வோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.அதேசமயம், தவறை தட்டிக் கேட்கும் விழிப்புணர்வு மக்களிடமும், தவறானப் பொருட்களுக்கு விளம்பரம் செய்யக் கூடாது என்ற எண்ணம் பிரபலங்களிடமும் உருவாக வேண்டும். இவ்வாறு ஜெயராமன் கூறினார்.