கலால் வரி உயர்வை ரத்து செய்து, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 14) வெளியிட்ட அறிக்கையி, "மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருப்பது வாகன உபயோகிப்பாளர்களை கடுமையாகப் பாதிக்கும்.
பொருள் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் வாடகை உயர்வும், அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து பொதுமக்களைப் பாதிக்கும்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில், அதன் பலனை உபயோகிப்பாளர்களுக்குத் தரும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைப் பெருமளவு குறைக்க வேண்டும்.
ஆனால், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி மக்கள் தலையில் பெரும் செலவுச் சுமையை ஏற்றியிருக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோதச் செயலை கண்டிப்பதுடன், கலால் வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.