தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் கொசுக்களால் பரவும் நோய்களால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. தமிழக அரசு கொசு ஒழிப்பு நடவடிக்கையை முறையாக மேற்கொள்வதில்லை.
கொசு ஒழிப்பு பணிக்கு நிரந்தர பணியாளர்கள் இல்லை. தற்காலிக பணியாளர்கள் சரியாக செயல்படுவதில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே கொசு பரவும் நோயால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, மனுதாரரின் கேட்கும் நிவாரணம் வழங்க முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.