நிகழ்ச்சியில் பேசும் இல.கணேசன் 
தமிழகம்

பாஜகவில் உள்ளது போன்று ஒரு திட்டம் ரஜினி மனதில் இருக்கலாம்: இல.கணேசன்

செ.ஞானபிரகாஷ்

பாஜகவில் அமைப்புக்கு என்று ஒரு பிரிவு, அரசியலுக்கு என்று ஒரு பிரிவு உள்ளது எனவும், இதுபோன்ற ஒரு திட்டம் ரஜினி மனதில் இருக்கலாம் எனவும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஆசிரியர் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கம் இன்று (மார்ச் 13) புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாகக் கேட்டதற்கு இல.கணேசன் கூறியதாவது:

"பாஜகவில் அமைப்புக்கு என்று ஒரு பிரிவு, அரசியலுக்கு என்று ஒரு பிரிவு உள்ளது. நான் அமைப்பிலிருந்து வந்தேன். பின்னாளில் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னைத் தேர்தலில் நிற்கப் பணித்தார்கள். தீனதயாள் உபாத்தியாயா எங்களது அகில பாரத தலைவராக இருந்து அமைப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். ஆட்சிக்கு வருவதற்கு வாஜ்பாய் போன்றவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

இந்தத் திட்டத்தின்படிதான் பாஜக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு திட்டம் ரஜினி மனதில் இருக்கலாம். அதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். எதுவாக இருந்தாலும் அவர் கட்சி தொடங்கிய பிறகுதான், அது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க முடியும். முதலில் கட்சி தொடங்கட்டும். அதன் பிறகே இவை எல்லாம் மக்களுக்குப் புரிய வரும்".

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதற்கு மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா என்று கேட்டதற்கு, "தமிழக பாஜக தலைவர்கள் குறித்து பத்திரிகையில் வந்த பெயர்ப் பட்டியலை பலர் கற்பனையாக எழுதி இருந்தார்கள். அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும். அவர் நியமிக்கப்பட்டதில் கட்சியினர் திருப்தியாக உள்ளனர். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால், நான் இந்த ரேஸில் இல்லை.

பாஜகவில் இருப்பவர்கள் சன்னியாசிகள் அல்ல. ஒருவர் ஒரு பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்குமானால், அந்த ஆசை பாஜகவில் இருப்பவர்களுக்கும் உண்டு. ஆனால், மற்ற கட்சிக்கும் பாஜகவுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், ஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். ஆனால், முடிவு என்று தலைவர் அறிவித்துவிட்டால், யார் பதவிக்கு விரும்பினாரோ அவர்தான் முதலில் சென்று தலைவராக அறிவித்த நபருக்கு மாலை போடுவார். இதுதான் பாஜகவின் விசேஷத் தன்மை" என்று இல.கணேசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT