தமிழகம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கும் முன்பு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா?- தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிப்பதற்கு முன்பு முறையாக பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகிறதா? என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், செம்பொன் கரையைச் சேர்ந்த எஸ். கணேசன். தேங்காய் வியாபாரி. இவரது மனைவி ருக்மணி. மகன் சுபாஷ் (16). மகள் அமிர்தவர்ஷினி (15). குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக ருக்மணி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 19.3.2011-ல் சேர்க்கப்பட்டார்.

அறுவைச் சிகிச்சையின்போது ருக்ம ணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஜன் ஆக்சைடு வாயு கொடுக்கப்பட்டதால், ருக்மணி கோமா நிலைக்குச் சென்றார். 25 நாட்களுக்குப் பிறகு ருக்மணி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. பின்னர் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின்பேரில், வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வேலூரில் ருக்மணிக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் 4.5.2016-ல் 411 நாட்களுக்குப் பிறகு நினைவு திரும் பாமலேயே ருக்மணி உயிரிழந்தார்.

இதையடுத்து மனைவியின் இறப்புக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு மற்றும் மனைவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கணேசன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மனுதாரர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நிகழ்வுகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

அரசு மருத்துவமனைகளில் நோயா ளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் முன்பு முறையாக பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகிறதா? இது தொடர்பாக, தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT