கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டன. இதனால் தமிழக – கேரளா எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தமிழக கால்நடைத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கேரளாலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக கேரளா எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபாலபுரம்,
நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் சித்திக், ரம்யா, கோவிந்தராஜ், சரவணன், ரம்யா, கிருஷ்ணவேணி ஆகியோர் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் டயர்களில் கிருமி நாசினி தெளித்த பின்னர் தமிழக எல்லைக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.
இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ''பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வாகனங்களின் டயர்களில்
பொட்டாசியம் பெர்மாங்கனைட், சோடியம் பை கார்பைனட், சோடியம் கார்பைனட், சோடியம் குளோரைட் ஆகிய ரசாயன மருந்து கலவை தெளிக்கப்படுகிறது.
கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் 2 மணி வரை ஒரு குழுவினரும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு குழுவினரும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஒரு குழுவினர் என அனைத்து சோதனைச் சாவடிகளும் 24 மணி நேரமும்
கண்காணிக்கப்படுகிறது'' என்றனர்.