என்.பி.ஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் போல் தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி விட்டார், சந்திரசேகர ராவும் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறி விட்டார்.
ஏற்கெனவே 11 மாநிலங்கள் அறிவித்து விட்டார்கள். தயங்காமல் நம் முதல்வரும் இதனை நிறைவேற்ற வேண்டும், இதைத்தான் நான் அவரை சந்திக்கும் போதும் கோரிக்கை வைத்தேன். அவர் என்ன சொன்னார் என்றால் ‘எனக்குக் கூட பிறந்தநாள் சான்றிதழ் இல்லை, அது சிரமம்தான், நிரூபிக்கறது கஷ்டம்தான்’ என்றார்.
இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் எதிரானது. நம்ம இவ்வளவு கேட்கிறோம் அல்லவா? பிரதமரிடம் பிறப்புச் சான்றிதழ் இருக்கா? நாட்டின் முதல் குடிமகன் கிட்டயே இருக்காது.
1969-க்குப் பிறகுதான் பிறப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 69-க்கு முன்னால் பிறந்த, என் அப்பாவுக்கெல்லாம் என்ன இருக்கும்? என் அம்மாவுக்கு எப்படி இருக்கும். நான் என்னுடைய பிறப்புச் சான்றிதழோடு, என் தாய் தந்தை பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை, அப்போது நான் இந்தியக் குடிமகன் ஆக முடியாது, அவர்களும் ஆக முடியாது.
அப்டீன்ன மொத்த நாடும் முகாம்லதான் இருக்கும்” என்றார் சீமான்