தமிழகம்

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி கடன்: செப்டம்பரில் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்- 2022-க்குள் முடிக்க மத்திய அரசு ஒப்புதல் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி கடன் பெற வரும் செப்டம்பரில் ஜப்பான் அரசிடம் மத்திய அரசு ஒப்பந்தம் போட உள்ளது.

கடன் கிடைத்ததும், பணிகளைத் தொடங்கி அனைத்துப் பணிகளையும் 2022-ம் ஆண்டு செப்டம்பரில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்திற்கான ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை மத்திய அரசு 2015-ம் ஆண்டு ‘பட்ஜெட்’டில் அறிவித்தது. ஆனால், தற்போது வரை இந்த மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் மட்டுமே நாட்டிச் சென்றுள்ளார்.

மேலும், சாலை அமைப்பது, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் ‘காம்பவுண்ட்’ சுவர் அமைப்பது உள்ளிட்டப் பணிகள் நடக்கிறது. இந்தியாவின் பிற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி நடக்கிறது.

ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் அறிவித்த மற்ற மாநிலங்களில் நடப்பு ஆண்டு முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மட்டும் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மக்களவையில் மத்திய அரசு எத்தனை புதிய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது? ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனைகளின் பணிகளின் தற்போதைய நிலைமைகள் என்ன? என்ற கேள்விகள் எழுப்பினார். அதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி கூறியதாவது:

நான் கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் வழங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 22 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 6 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மதுரை ‘எய்ம்ஸ்’மருத்துவமனை குறித்து கூறும்போது ரூ.1,264 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், முதலீட்டிற்கு முந்தைய பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான நிதியினை ஜைக்கா மூலம் பெறுவதற்கான நிகழ்முறை தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் ஜப்பான் அரசு ஒப்புதலுடன் கடன் நிதி பெறுவதற்கான ஒப்பந்தம் உத்தேசமாக 2020ம் ஆண்டு செப்டம்பரில் கையெழுத்திடப்பலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT