அன்புமணி ராமதாஸ் - க.அன்பழகன்: கோப்புப்படம் 
தமிழகம்

அரசியலில் அதிசயங்களாகத் திகழ்ந்த வெகுசிலரில் குறிப்பிடத்தக்கவர் அன்பழகன்; அன்புமணி புகழாஞ்சலி

செய்திப்பிரிவு

அரசியலில் அதிசயங்களாகத் திகழ்ந்த வெகுசிலரில் க.அன்பழகன் குறிப்பிடத்தக்கவர் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி இன்று (மார்ச் 7) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான க.அன்பழகன் மாணவர் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்தவர். கற்றவர்கள் பலரும் அரசியலில் வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். கட்சியிலும், ஆட்சியிலும் தாம் வகித்த பதவிகளுக்குப் பெருமை சேர்த்தவர் க.அன்பழகன். திமுகவில் இருந்தாலும் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் நேசிக்கப்பட்டவர்; மதிக்கப்பட்டவர் ஆவார்.

என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியலில் அதிசயங்களாக திகழ்ந்தவர்கள் வெகுசிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் க.அன்பழகன். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும்.

க.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT