மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி டெண்டர்கள் குறித்தும், மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் தமிழக அரசை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்தி 'முரசொலி' நாளிதழில் செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் தமிழக முதல்வர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கவுரி அசோகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளில் ஏப்ரல் 8-ம் தேதி நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டதாகவும், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே தன் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று (மார்ச் 6) விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், பிப் 23-ம் தேதிக்குள் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT