பாஜகவில் சேருவதற்கு பல நடிகர்கள் தயாராக உள்ளதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சென்னை, கோவை உட்பட பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, முஸ்லிம்கள் இச்சட்டத்தால் அச்சப்படத் தேவையில்லை என உறுதியளித்தார்.
அதே சமயத்தில், இச்சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினர் போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூரில் நேற்று (மார்ச் 3) இந்து முன்னணி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, பாஜகவில் இணைந்ததன் மூலம் தான் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார். பாஜகவில் சேருவதற்கு பல நடிகர்கள் தயாராக உள்ளதாகவும், இதுகுறித்து நடிகர் கார்த்திக்கிடம் தான் பேசியதாகவும் ராதாரவி கூறினார்.
"பாஜகவில் சேருவதற்கு நடிகர்கள் பலர் வரவிருக்கின்றனர். அவர்கள் பாஜகவில் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர். கார்த்திக்கிடம் இதுதொடர்பாக நான் பேசியுள்ளேன்" என ராதாரவி தெரிவித்தார்.