கோப்புப் படம் 
தமிழகம்

மீனம்பாக்கத்தில் அனைத்து வசதிகளுடன் ஆர்டிஓ அலுவலகம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அடிப்படை வசதிகளுடன் ஆலந்தூரிலேயே அமைத்து தரக்கோரிய மனுவை 2 மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாமல் பாழடைந்த நிலையில் மீனம்பாக்கத்தில் இயங்கி வந்த ஆர்டிஒ அலுவலகத்தை ஆலந்தூர் பகுதிக்கு தமிழக அரசு மாற்றியது. மேலும், வாகனங்களுக்கான உரிமம் பெற ஓட்டுனர் சோதனை நடத்தப்படும் திடலுக்காக 0.32 ஹெக்டேர் நிலமும் ஒதுக்கப்பட்டது.

ஆலந்தூர் அலுவலகத்திற்கு புதிய கட்டிமோ, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளோ ஏற்படுத்தி கொடுக்காததால், வாகன உரிமம் பெற வருபவர்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இதை மாற்றக்கோரி மகாத்மா காந்தி மனித நேய மக்கள் நல சங்கம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யவும், புதிய ஆர்டிஒ அலுவலகத்தை ஆலந்தூரிலேயே கட்டித் தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை 2 மாதத்தில் சட்டத்திற்குபட்டு பரிசீலினை செய்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT