தமிழகம்

சிஏஏ போராட்டங்களை முடிக்க கோரி வழக்கு: தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானபோராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடந்துவரும் போராட்டங்களால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதாகவும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் அதிக அளவில் போராட்டத்தில் பங்கெடுப்பதாகவும், எனவே, இப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சேலத்தில் நடந்து வருவது போலவே சென்னையிலும் சில இடங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது, இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT