தமிழகம்

போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் மோர்: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

வெயிலில் பணியாற்றும் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் மோர் வழங்கும் நிகழ்ச்சியை ஜெமினி மேம்பாலம் அருகே காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

கோடைகாலத்தில் சென்னை போக்குவரத்து போலீஸாரின் தாகத்தைத் தணிக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் மோர் வழங்கும் நிகழ்ச்சியை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். மேலும் ஐந்து காவல் அதிகாரிகளுக்கு சுசுகி மோட்டார் நிறுவனத்தின் 5 சிறப்பு போக்குவரத்து சுற்றுக்காவல் இருசக்கர வாகனங்களையும் வழங்கினார்.

இந்த வாகனத்தில் மைக், ஒலிப்பெருக்கி, ஒலி எழுப்பி உள்ளிட்ட அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன. இந்த வாகனம் ஜப்பான் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருசக்கர வாகனத்தின் மதிப்பும் 2.5 லட்சம் ரூபாய் என மொத்தமாக 12.5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காவல்துறையினருக்கு 5000 மோர் பாக்கெட்டுகள் வழங்கப்படும். ஒரு மோர் பாக்கெட் ரூ.4.95 மொத்தம் 5000 மோர் பாக்கெட்டுக்காக நாள் ஒன்றுக்கு ரூ. 24 ஆயிரத்து 750 ஆகிறது. 122 நாட்களுக்கு மொத்தமாக ரூ.30 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண், போக்குவரத்து இணை ஆணையர் எழிலரசன், போக்குவரத்து இணை ஆணையர் ஜெயகௌரி, போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்பு பேசிய சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், “சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் பங்கு மிக அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கட்டாயம் தலைக்கவசம் அணியச் சொல்வது முக்கியம். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை சென்னை காவல் துறையினர் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்” என்று பேசினார்.

SCROLL FOR NEXT