தமிழகம்

கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை: மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கி.மகாராஜன்

கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் விடுதலையான 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துக்குமார். பொறியியல் பட்டதாரி. இவர் கஞ்சா விற்பனை தொடர்பாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் சிலர் மீது புகார் அளித்தார். இந்த முன்விரோதம் காரணமாக 2007-ல் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக அவனியாபுரம் போலீஸார் பால்பாண்டி, வீரபாண்டி, ராமச்சந்திரன், வில்வதுரை, பாண்டி, சின்னமணி, மூர்த்தி, கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். இதில் பால்பாண்டி இறந்துவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையை ரத்து செய்யக்கோரி முத்துக்குமாரின் தந்தை முருகன் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இதனை நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, 7 பேரையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT