கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல், ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் பழனிசாமி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.
சீனா மற்றும் கொரியாவைத் தொடர்ந்து ஈரானிலும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பெரும்பாலான வளைகுடா நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் உட்பட 450 இந்திய மீனவர்களை மீட்க வேண்டும் என, இன்று (பிப்.28) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய மீனவர்கள் கிஸ் உட்பட ஈரானைச் சுற்றியுள்ள துறைமுகங்களில் தத்தளிப்பதாகவும் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அதனால், ஈரானிலுள்ள இந்திய தூதரகம் அந்த மீனவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் பழனிசாமி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.