தமிழகம்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அமைச்சர் மீது புகார்: தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்புள்ளதாக கூறிய திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது தமிழக அரசு சார்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீ ஸார், தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் என பலரை கைது செய்துள்ளனர்.

நாளிதழில் செய்தி

இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சிமுறைகேடுகளில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்புள்ளதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் விரைவில் உண்மை வெளிவரும் என்று கடந்த ஜன.31-ம் தேதி சென்னையில் திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் கூறியதாக நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் மீது அவதூறு பரப்பும் வகையில் தயாநிதி மாறன் பேட்டி அளித்துள்ளதாகக் கூறி, தமிழக அரசு தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசியல் உள்நோக்கம்..

‘டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்புள்ளது என்ற தயாநிதி மாறனின் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது, ஆதாரமற்றது. எனவே, அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வழக்கு மனுவில் கோரப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT