முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் உடன் உயிரிழந்த காவல் துறையினர் 16 பேரின் குடும்பங்களுக்கும் காயம் அடைந்தோருக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.விஜயதரணி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் மேலும் பேசியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சட்டப்படியான நடவடிக்கைகளை ஆதரிப்பதாக காங் கிரஸ் கட்சியும் கூறியுள்ளது. ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டபோது உடன் இருந்த காவல் துறையைச் சேர்ந்த 16 பேரும் உயிரிழந்தனர். மேலும் காவல் துறை மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் காயமடைந்தனர். அவர்களில் எனது தாயாரும் ஒருவர்.
தற்போது தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்படும் காவல் துறையினருக்கு அரசு ரூ.1 கோடி அளவுக்கு அரசு நிதி வழங்குகிறது. அதுபோல ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்ட காவல் துறையினர் குடும்பங்களுக்கும் காயம் அடைந்தோருக்கும் தமிழக அரசு உதவ வேண்டும்.
தமிழகத்தில் 65 சதவீத பிரசவங் கள் அரசு மருத்துவமனையில் நடைபெறுவது பாராட்டுக்குரியது. தனியார்மருத்துவமனைகளில் குழந்தையைபிரசவிக்க அறுவை சிகிச்சை செய்கின்றனர்.
அரசு மருத்துவமனைகள் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சை இல்லாத பிரசவத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு விஜயதரணி பேசினார்.