தமிழகம்

ஃபேஸ்புக்கில் தேசிய கொடி அவமதிப்பு: கிருஷ்ணகிரி எஸ்பியிடம் வி.ஹெச்.பி. புகார்

எஸ்.கே.ரமேஷ்

ஃபேஸ்புக்கில் தேசிய கொடியை அவமதித்த இளைஞரை கைது செய்ய கோரி, கிருஷ்ணகிரி எஸ்பியிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் மற்றும் அமைப்பினர் நேற்று எஸ்பி கண்ணம்மாளிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளமான பேஸ்புக்கில்(முகநூல்) அசூரன் என்கிற பெயரில் நமது தேசிய கொடியை எரிக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளர். மேலும், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கொண்டாட வேண்டும் என அவமதிக்கும் வகையில் பதிவினை இளைஞர் வெளியிட்டுள்ளார்.

நமது நாட்டு தேசிய கொடியையும், சின்னத்தை அவமதிக்கும் வகையில் வெளியிட்டுள்ளது மிகுந்த மனஉளைச்சல் ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட போலீஸார் சம்மந்தப்பட்ட இளைஞரின் முகநூல் பக்கத்தை ஆய்வு செய்து, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரது பதிவிற்கு லைக் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தேசிய சின்னம் மற்றும் கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படியும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பி கண்ணம்மாள் கேட்ட போது, புகாரினை விசாரிக்க, சேலம் சைபர் க்ரைமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

          
SCROLL FOR NEXT