பழநி தைப்பூசவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக சென்று பக்தர்கள் பழநியில் குவிந்துவருகின்றனர். இதனால் பழநி விழாக்கோலம் பூண்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் பிப்ரவரி 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, காமேதேனு, தங்கமயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் ஆறாம் நாளான (பிப்.,7) இன்று இரவு 8 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வெள்ளிதேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
தைப்பூசத் தேரோட்டம்:
விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசம் நாளை நடைபெறுகிறது. அன்று (பிப்., 8) மாலை தைப்பூசத் தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
பழநிக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்த பக்தர்கள் மலைக்கோயிலில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு பழநி மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.
காலை 5 மணிக்கு மேல் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாளில் சண்முகநதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பகல் 12 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் சுவாமி எழுந்தருள்கிறார்.
தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரதவீதிகள் வழியாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரி்ல் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
தேர் நிலை வந்தடைந்தவுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
தைப்பூசவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்துவருவதால் வழக்கமாக இரவில் நடைபெறும் தங்கத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.