தமிழகம்

எட்டாம் வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் தத்காலில் பிப்.10 முதல் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடப்பு கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 8-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் இறுதி வாய்ப்பாக தத்கால் திட்டத்தின்கீழ் பிப். 10 முதல் 12-ம் தேதி வரை 3 நாட்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.675-ஐ செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது பள்ளியில் பெற்ற அசல் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் பயிலாதவர்கள் தங்களின் அசல் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 8-ம் வகுப்பில் தோல்வியடைந்த குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஏற்கெனவே உள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதளம் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT