படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு: மதுரையில் ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்புப் போராட்டம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

மத்திய அரசு அறிவித்துள்ள எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அந்நிறுவன ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, 2020 - 21 பட்ஜெட்டில், எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை பொது பங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இது நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள எல்ஐசி ஊழியர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில், எல்ஐசி.,யின் பங்குகள் விற்கப்படும் என்ற மத்திய பட்ஜெட் அறிவிப்பைக் கண்டித்து அதன் ஊழியர்கள், அதிகாரிகள் இன்று ஒரு மணி நேரம் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.

அதன்படி, மதுரையில், செல்லூரில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலக வளாகத்தில் பகல் 12 மணிக்கு எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், மதுரை தல்லாகுளம் எல்ஐசி கிளை அலுவலகத்திலும் ஒரு மணிநேரம் பணியைப் புறக்கணித்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் தலைமை வகித்தார்.

இதுதவிர ஆரப்பாளையத்திலும் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT