அண்ணா அறிவாலயம்: கோப்புப்படம் 
தமிழகம்

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல்: பிப்.21 முதல் தொடங்கி நடைபெறும்; தலைமைக் கழகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (பிப்.3) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் 2020 பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

1949 ஆம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக, இதுவரை 14 பொதுத் தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய இயக்கம் திமுக ஆகும்.

திமுக சட்டதிட்டங்களின்படி, பல கட்டங்களாக திமுக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். முதல் கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து பேரூர்க் கழகம் மற்றும் மாநகர வட்டக் கழகத் தேர்தல்கள், அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, நகர, மாநகரப் பகுதிக் கழகத் தேர்தல்களும், பின்னர், மாநகரக் கழகத் தேர்தல்களும் நடைபெறும்.

இவற்றைத் தொடர்ந்து, மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT