குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலக ஊழியர், வட்டார போக்குவரத்து அலுவலக பெண் ஊழியர் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.
டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் நடந்தமுறைகேடு தொடர்பாக சிபிசிஐடிபோலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள், பணம்கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், சிபிசிஐடி அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர். அதனடிப்படையில், காரைக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் வேல்முருகன், வில்லிபுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் ஜெயராணி ஆகியோரை நேற்று முன்தினம் சிபிசிஐடிபோலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்பேரில் குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் சுதாராணி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உதவியாளராக இருக்கும் விக்னேஷ் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரும் இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரிடம் கார் ஓட்டுநராக இருந்த சம்பத் என்பவரின் மனைவிதான் சுதாராணி என்பது தெரியவந்துள்ளது. இவர், சென்னை கொரட்டூரில் வசிக்கிறார்.
குரூப்-4 மற்றம் குரூப்-2ஏ தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கில் சென்னை ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், பொய்யாக புனையப்பட்ட ஆவணங்களை உண்மை எனக் கூறி பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.