மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் போக்குவரத்து போலீஸார் சார்பில் சிக்னல்களில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார் சார்பில் நேற்று காலை 11 மணி அளவில் அனைத்து சிக்னல்களிலும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக 11 மணி முதல் 11.02 மணி வரை சென்னையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து 2 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை சிக்னலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் டி.பி.டேனியல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.