"பெரியாரை கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்" என்று ரஜினிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்தார்.
மதுரை ஹார்விப்பட்டியைச் சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவரின் உடலை மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் வழங்கும் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 8 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், மத்திய கல்விக் கொள்கையை மத்திய அரசை விட விரைவாக செயல்படுத்தி மத்திய அரசுக்கு ராஜ விசுவாசமாக தமிழக அரசு செயல்படுத்துகிறது.
5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நடைமுறையை அரசு திரும்பப் பெற வேண்டும்.
மன்னிப்பு கேட்பது என்பது மனித பண்பாட்டின் பெருந்தன்மை. ரஜினி பெரியார் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பேசியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும். அப்படிக் கேட்காவிட்டாலும் ரஜினி நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்.
இன்றைக்கு மற்ற பத்திரிகைகளை ஆதாரமாகக் காட்டும் ரஜினி, பெரியார் குறித்து பேசியபோது ஏன் அதற்கு ஆதாரமாக துக்ளக் பத்திரிகையைக் காட்டவில்லை. அப்படியென்றால், அதில் உண்மை இல்லை என்பது தானே அர்த்தம்.
பெரியாரை கொச்சைப்படுத்தியவர்கள் ஆயிரமாயிரம் பேர் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.