குடியுரிமை சட்டத்தை ஆதரித்து குமரியிலிருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ள பாஜக பெண் உறுப்பினர் ராஜலட்சுமி மந்தாவுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் பயணத்தை தொடங்கிய அவர், திருநெல்வேலி, தூத்துக்குடி, எட்டயபுரம் வழியாக நேற்று மதியம் கோவில்பட்டி வந்தார்.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன் அவரை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் நாராயணன், நகர தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் அவர்கள் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் குடியுரிமை சட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். பின்னர் ராஜலட்சுமி மந்தா சாத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.
ஜன.30-ம் தேதி அவர் தனது பயணத்தை சென்னையில் நிறைவு செய்கிறார்.