உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதா? யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்த பகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும், தள்ளி வைக்கப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் 10 ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தக் கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘சேலம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் திமுக தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதேபோல போதிய கவுன்சிலர்கள் மறைமுகத் தேர்தலுக்கு வராத காரணத்தினால் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக 10 ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள்தான் பரிசீலிப்பர்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘‘மறைமுகத் தேர்தலில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை என மாநில தேர்தல் ஆணையம் கூறுவது பொய். விருதுநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தலின்போது அதிமுக பிரமுகர் ஒருவர், டிஎஸ்பி வெங்கடேசனை அரிவாளால் தாக்கியுள்ளார்’’ என்று தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதா? அவை தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், கண்காணிப்பு கேமரா பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்குமா எனவும் கேள்வி எழுப்பினர்.
அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘சிசிடிவி கேமரா பதிவுகள் மாநில தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது வரை சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.