ஜல்லிக்கட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அலங்கா நல்லூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அளித்திட ஏதுவாக முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அனைத்துத் துறைகளும் சிறப்பாக செய்திருந்தன.
அதிமுகவின் அம்மா பேரவைசார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் கார்கள் முதல்வர், துணை முதல்வர்பெயரில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், சிறந்த காளைஉரிமையாளருக்கு ஒரு காரும் முதல்வர், துணை முதல்வர் சார்பில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறந்த காளையின் உரிமையாளர் மற்றும் சிறந்த மாடுபிடி வீரரை சென்னைக்கு அழைத்துச் சென்று முதல்வர் கையால் பரிசு வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டுப்போல் தமிழர்களுடைய மற்ற வீர விளையாட்டுகளையும், கலை மற்றும் கலாச்சாரத்தை அதிமுக அரசு பாதுகாக்கும். கிராமபுற இளைஞர்கள்விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தவும், வளர்க்கவும் வீரவிளையாட்டுகளின் தரம்மேம்படுத்தப்படும். அதற்கான பயிற்சி மையங்கள், பயிற்சியாளர்கள் உருவாக்கப்படுவர் என்றார்.