சென்னையில் போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது மற்றும் கடும் பனி காரணமாக புகைமண்டலம் சூழ்ந்தது. காற்றின் மாசுவும் இயல்பைவிட அதிகம் இருந்தது. சென்னையில் விமானம் தரையிறங்குவதும் பாதிக்கப்பட்டது.
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டமும், காற்று மாசும் அதிகரித்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரிப்பது வாடிக்கை. இது ஒருகட்டத்தில் குளிருக்காக பழைய டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரிக்கும் பழக்கமாக மாறியது.
இதனால் காற்றில் மாசு கலந்தது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரம், மற்றும் நடவடிக்கை மூலமாக இதை கட்டுப்படுத்திவருகிறது. சாதாரண மரத்தாலான பொருட்கள், பேப்பர்கள், துணிகள் போன்ற பயனில்லாத பொருட்களை மட்டுமே எரிக்கவேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று போகி பண்டிகைக்கு பொருட்களை எரித்தது, பனி மூட்டம் காரணமாக துகள்கள் கரையாமல் காற்றில் மாசு அதிகரித்தது. மேலும் பனிமூட்டமும் இருந்ததால் எதிரில் வருபவர்கூட தெரியாத அளவுக்கு நிலை மாறியது. சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் காற்று மாசு அதிகமாக இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசு என்பது 100-க்குள் இருக்கவேண்டும். அதை தாண்டினால் பல சுவாசப்பிரச்சினைகள் பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. அலர்ஜி ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கும் சூழலும் உருவாகும். சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் மணலியில் அதிகப்பட்சமாக 795 குறியீடுகளாக இருந்தது பதிவாகியுள்ளது.
அண்ணாசாலையில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தில் 272 குறியீடுகளாகவும் ஆலந்தூரில் 161 குறியீடுகளாகவும் குறைந்த பட்சமாக வேளச்சேரியில் 100 ஆகவும் காற்று மாசு பதிவாகியுள்ளது. காற்றில் புகையும் கலந்ததால் பனிமூட்டம் ஏற்பட்டு அதிகாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் புகைபோல் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அனைவரும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டி சென்றனர். கடும் பனிமூட்டம் காரணமாக மீனம்பாக்கத்தில் விமானங்கள் தரையிறக்குவதிலும், புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.
கடும் புகை மூட்டம் காரணமாக 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 15-க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. கடும் புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி சேலம் செல்ல வேண்டிய விமானமும் தாமதமானது, அவர் 1-45 மணி நேரம் காத்திருந்து புறப்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.
போகி பண்டிகை என்பதால் பனியும் புகையும் சேர்ந்து பனிப்புகை நிலவும் எனவும் தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் மூடுபனி இருக்க கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.