தமிழகம்

பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்

அ.அருள்தாசன்

பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

கடந்த 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான மூன்று முறை ஒத்திவைப்பட்டது. இந்நிலையில், நீதிபதி நசீர் அகமது ஜாமீன் இன்று (ஜனவரி 10) ஜாமீன் வழங்கினார்.

ஜாமீன் உத்தரவு கிடைத்த பின்னர் நெல்லை கண்ணன் நாளை விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT