பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

24 மணிநேரத்தில் நிறைவு பெறும் வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் 2% மழை அதிகம்: சென்னை வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் இன்று (ஜன.9) சென்னை, நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"கடந்த 3 மாதங்களாக, தென்னிந்திய பகுதிகளில் நிலவிய வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்து விட்டதால், அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறுகிறது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பை விட 2 விழுக்காடு அதிகம் மழை பெய்துள்ளது. அதிகபட்ச மழை அளவாக நீலகிரி மாவட்டத்தில் 64 விழுக்காடும், அதைத்தொடர்ந்து ராமநாதபுரம், நெல்லையில் 45 விழுக்காடும் தூத்துக்குடியில் 31 விழுக்காடும், கோவையில் 29 விழுக்காடும், புதுக்கோட்டையில் 27 விழுக்காடும் மழை பெய்துள்ளது.

குறைந்தபட்ச மழை அளவாக, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவையில் சராசரியாக 24 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், காலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப்பொழிவும் நிலவும்"

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT